
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முதல் ஒன்டேயில் ஐதராபாத்தில் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது.
டோனி 87, ரெய்னா 61, கோக்லி 37, காம்பீர் 32, ஜடேஜா 27 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழற்பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காட செய்தனர்.
36.1 ஓவரில் இங்கிலாந்து 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 126 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குக் 60 எடுத்தனர்.
இங்கிலாந்து அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 63 ரன்களுக்கு சாய்ந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3, உமேஷ்யாதவ் 2, பிரவீன்குமார் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக இந்திய அணி ஜூன் 11ந் திகதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது.
125 நாட்களுக்கு பின்னர் தற்போது 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. வெற்றி குறித்து கப்டன் டோனி அளித்த பேட்டி: பழிவாங்கும் தொடர் என்று இதை கூற முடியாது. பழிவாங்கும் என்ற சொல் மிகவும் கடுமையானது. இங்கிலாந்தில் பிற்பாதியில் நாங்கள் சிறப்பாகதான் ஆடினோம். மழையால் தான் பிரச்னை ஏற்பட்டது.
தற்போது இந்த தொடர் இளம் வீரர்கள் தங்களை முன்னேற்றி கொள்ள உதவும். நீண்டநாட்களுக்கு பிறகு இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆட்டமும் சிறப்பாக இருந்தது.
நான் ஆடிய ஆட்டங்களில் இது மதிப்புமிக்க ஒன்று. 6வது இடத்தில் களமிறங்குவதால் எனது துடுப்பாட்டத்தில் நிறைய மாற்றங்களை ஏற்கனவே செய்து விட்டேன். தற்போது ராக்கெட் ஷாட் அடிப்பதற்கு அதிகம் பயிற்சி எடுத்தேன்.
இந்த ஆட்டத்தில் அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பனிப்பொழிவு பிரச்னை இருக்கும் என்று நினைத்ததால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஆனால் அந்த பிரச்னை அவ்வளவாக இல்லை.
ஜடேஜா மிகச்சிறந்த வீரர். பந்துவீச்சுடன் துடுப்பாட்டத்திலும் அவர் அசத்தினார். உமேஷ்யாதவ் நன்கு வேகமாக செயல்பட்டார்.


0 comments:
Post a Comment