
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காம்பீர் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். தெண்டுல்கர், ஷேவாக் ஆடினால் மட்டுமே அவர் மூன்றாவது வீரராக விளையாடுவார்.
மற்ற நேரங்களில் தொடக்க வீரராக விளையாடுவார். தெண்டுல்கருடனோ அல்லது ஷேவாக்குடனோ இணைந்து தொடக்க வீரராக ஆடுவார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர், ஷேவாக் இடம் பெறவில்லை. இதனால் காம்பீர் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரகானேயும், பார்த்தீவ் பட்டேலும் தொடக்க வீரராக விளையாடினார்கள். காம்பீர் மூன்றாவது வீரராக ஆடினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காம்பீர் காயம் காரணமாக விளையாடாததால் பார்த்தீவ் பட்டேலும், ரகானேயும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அதே நிலையை அணி நிர்வாகம் தற்போது பின்பற்றி உள்ளது. இந்த நிலையில் காம்பீர் தொடக்க வீரராக ஆட வேண்டும், அதை தான் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் காம்பீரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது வீரராக களம் இறங்கியதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர் தொடக்க வீரராக உறுதியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.
அவர் தொடக்க வீரராக விளையாடுவதையே நான் விரும்புகிறேன். அவர் ஒரு திறமை வாய்ந்த துடுப்பாட்டக்காரர் ஆவார். 50 ஓவர் வரை நின்று ஆடக்கூடிய திறமை உள்ளது. உமேஷ் யாதவின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. அவர் அதிகமான யார்க்கர் போட்டார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
வருண் ஆரோனுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க இதுவே நல்ல தருணம்.
ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைமர்ஸ் அணியின் கப்டனாக காம்பீர் உள்ளார். அதே அணியின் பந்துவீச்சு ஆலோசகராக வாசிம் அக்ரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News:Lanka Sri


0 comments:
Post a Comment