
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் டில்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கங்குலி கூறியிருப்பது:
இந்திய அணி வலிமையானது. உலகின் எந்த அணியையும் வெல்லும் திறன் உள்ள வீரர்கள் நமது அணியில் உள்ளார்கள். அணியில் தொடர்ந்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வீரர்கள் காயமடைந்ததுதான் முன்பு இங்கிலாந்துத் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததற்குக் முக்கியக் காரணம். முக்கியமாக ஜாகீர் கான் காயமடைந்தது, பந்து வீச்சை பலவீனமாக்கி விட்டது.
சுரேஷ் ரெய்னா சிறந்த வீரர். அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றி தொடரும். ஆனால் அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு நடைபெறும் போட்டிகள் நமது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஐபிஎல், ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் பணியையும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என்றார்.
தனியார் நிறுவன விளம்பர நிகழ்ச்சிகாக பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வந்த கங்குலி இவ்வாறு தெரிவித்தார்.
News:LankaSri


0 comments:
Post a Comment