
பரபரப்பான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, அவுஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி முதல் கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்றது.
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. டொஸ் வென்ற அவுஸ்திரேலிய கப்டன் கேமரான் ஒயிட் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர்(0), மாத்யூ வேட்(10) ஏமாற்றம் அளித்தனர். ஷான் மார்ஷ்(26), டேவிட் ஹசி(12), கேமரான் ஒயிட்(39) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் அதிரடியாக 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியின் டாப்-ஆர்டர் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். கப்டன் ஹஷிம் ஆம்லா(4), ஸ்மித்(24), இங்கிராம்(5), டுமினி(0) விரைவில் வெளியேறினர். போத்தா 34 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
இந்த நேரத்தில் டெயிலெண்டர்களான வெய்ன் பார்னல், திரான் சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. டேவிட் ஹசி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டிய திரான் அணிக்கு திரில் வெற்றி தேடி தந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்னல்(29), திரான்(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை திரான் பெற்றார்.
News:LankaSri


0 comments:
Post a Comment