கட்டாரைச் சேர்ந்த பின் ஹம்மாமுடன் பீபா உபதலைவர்களில் ஒருவரான ட்ரினிடாட்டைச் சேர்ந்த ஜக் வார்னரும் ஃபீஃபா ஒழுக்காற்றுக் குழுவொன்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஃபீஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக பின் ஹம்மாம் சேர்ந்த பின் அறிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக ட்ரினிடாட்டில் நடைபெற்ற கரிபிய கால்பந்தாட்ட ஒன்றிய பிரதிநிதிகளின் விசேட கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் 25 நாடுகளின் பிரநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கான பயணச் செலவு தங்குமிடச் செலவுகள் பின் ஹம்மாமினால் ஏற்கப்பட்டன. அதேவேளை கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு விசேட அன்பளிப்பு பொதியொன்றும் வழங்கப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது.
அப்பொதிகள் ஒவ்வொன்றிலும் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இருந்தனவாம். பஹாமஸ் நாட்டின் பிரதிநிதி தமக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் கடதாசிப் பையையும் அதிலிருந்த பணத்தையும் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார். அதில் 100 அமெரிக்க டொலர்; நாணயத்தாள்களான 40 ஆயிரம் டொலர்கள் காணப்படுகின்றன.
இது ஃபீஃபா தலைவர் பதவிக்கு தெரிவாகுவதற்கான வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் வழங்கல் நடவடிக்கை என பின் ஹம்மாமுக்கும் பீபா உபதலைவர் ஜக் வார்னருக்கும் எதிராக புகாரிடப்பட்டது.
இது தொடர்பாக ஃபீஃபா ஒழுக்காற்றுக்குழு விசாரணை நடத்தவிருந்த நிலையில் ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டருக்கு இவ்விடயம் முன்கூட்டியே தெரியும் என பின் ஹம்மாம் தெரிவித்தார். அதனால் மேற்படி 3 முக்கிய புள்ளிகளிடமும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இவ்விசாரணைகளின்பின் ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த ஒழுக்காற்று குழு, ஜக் வார்னரையும் பின் ஹம்மாமையும் இடைநிறுத்தியுள்ளது.
இவர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதில் குற்றவாளிகளாக காணப்பட்டால் எந்த வகையான கால்பந்தாட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் தன்னை இடைநிறுத்தியமைக்கு எதிராக தான் மேன் முறையீடு செய்யப்போவதாக பின் ஹம்மாம் அறிவித்துள்ளார். ஃபீஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து அவர் ஏற்கெனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள ஃபீஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தெரிவாகும் நிலையை ஸெப் பிளாட்டர் எதிர்நோக்குகிறார். சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த 75 வயதான பிளாட்டர் 4 ஆவது தடவையாக இப்பதவிக்குப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri


0 comments:
Post a Comment