இந்திய "மாஸ்டர் துடுப்பாட்டக்காரர்" சச்சின், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இருவரும் தனக்கு முன் மாதிரி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் வல்தாட்டி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல். தொடர் நடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இளம் இந்திய வீரர் பால் வல்தாட்டி 14 போட்டியில் ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 463 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக ரன் சேர்க்கும் இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதுகுறித்து வல்தாட்டி கூறியதாவது, நான்காவது ஐ.பி.எல். தொடரில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய "மாஸ்டர் துடுப்பாட்டக்காரர்" சச்சின் மற்றும் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இருவரையும் எனது முன் மாதிரியாக கொண்டுள்ளேன். இவர்கள் இருவரும் உண்மையான சம்பியன்கள். இவர்களது செயல்பாடு, போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து வரும் ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்க விரும்புகிறேன். எனது வெற்றிக்கு கப்டன் கில்கிறிஸ்ட் தந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இவர், என்னைப் போன்ற இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். துடுப்பாட்டம் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.
ஐ.பி.எல். தொடர் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் மேடையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடர் மூலம் நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று வல்தாட்டி தெரிவித்தார்.
News: Lankasri


0 comments:
Post a Comment