பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷாகித் அப்ரிதி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அணியில் அப்ரிதி இடம்பெற்றுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட், உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகிய இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிய அப்ரிதி அணி விவகாரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.இதனிடைய புதன்கிழமை இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இஜாஸ் பட், அணி விவகாரம் குறித்து அப்ரிதி தேவையில்லாமல் அடிக்கடி ஊடகங்களில் பேசி வருகிறார். அவரது நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக உள்ளது. அவரது கேப்டன் பதவிக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றார்.இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகக் கோப்பையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் களமிறங்கினாலும் பாகிஸ்தானை அரையிறுதி வரை கொண்டு சென்றவர். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று கொடுத்தவர் அப்ரிதி என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கிந்தியத் தீவுகள் தொடரை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிய அப்ரிதி, தனது கேப்டன் பணியில் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் தேவையில்லாமல் தலையிடுகிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.அப்ரிதியின் தந்தை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதால், அப்ரிதி அங்கு சென்றுள்ளார். அதனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சகோதரர் இறந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து பாதியிலேயே பாகிஸ்தான் திரும்பிய யூனிஸ்கான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
News:Lankasri


0 comments:
Post a Comment